30.9.04

மணிச்சித்திரதாழ்" தான் "சந்திரமுகியா"?

தினத்தந்தியில் தலைப்புச்செய்தி என்றவுடன் பேப்பரை வாங்கி விட்டேன்.தினத்தந்தியின் இலவச இணைப்பான குடும்ப மலரில் இப்படம் மலையாள சூப்பர்ஹிட் படமான "மணிச்சித்திரதாழ்"ன் தழுவல் என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இதை நான் நேற்றுவரை படிக்கவில்லை. என்னுடைய அலுவலக நண்பர் குடும்ப மலரை படித்து விட்டு , படித்த செய்தியை அரைகுறையாக நினைவில் வைத்து ரஜினி டிரகுலா படத்தில் நடிக்கிறார் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். பாபாவில் "கடவுள்", சந்திரமுகியில் " டிரகுலா" வா? என நான் அதிர்ந்து போனேன். பின்பு வீட்டிற்கு சென்று குடும்ப மலர் பார்த்த பின்புதான் தெரிந்தது ம்ணிச்சித்திரதாழ்" தான் என் நண்பர் குறிப்பிட்ட படம் என்று. இன்றைய தினமணியும் இச்செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்.

"மணிச்சித்திரதாழ்" பாசில் இயக்கத்தில் மோகன்லால், சோபனா, சுரேக்ஷ்கோபி நடித்து வெளியான மலையாளப்படம். மோகன்லாலிற்கும், சோபனாவிற்கும் (??) இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. மர்மதேசம் சீரியல் மூலமாக தமிழகத்தில் பிரபலமடைந்த "split personality" பிரச்சனையை அடிபடையாக கொண்ட கதை. மிகவும் விறுவிறுப்பாகவும், சஸ்பென்சுடனும் காட்சிகள் நகரும். அமானுடக் கதைகளையும் மெல்லிய மானுட உணர்வுகள் இழையோட சொல்லும் வல்லமை பாசிலுக்கே உரியது. தமிழில் பாசில் எடுத்த "கிளிப் பேச்சு கேட்க வா" படத்திலும் பாசிலின் இவ்வல்லமையை காணலாம். படத்தில் தமிழ் பாடல்களும் , பாசுரங்களும் உண்டு. "ஒரு முறை தழுவ மாட்டாயா" என்ற பாடலுக்கு ஷோபனா நடனமாடும் பிண்ணனியில் அமைக்கப் பட்ட கிளைமாக்ஸ். அனைவரும் நிஜமாகவே சீட்டின் நுனிக்கோ, வீட்டிலிருந்து பார்த்தால் சோபாவின் நுனிக்கோ வந்து விடுவோம்.

மோகன்லால் இடைவேளைக்கு முந்திய காட்சியில்தான் அறிமுகமாவார்.மனோத்தத்துவ நிபுணராக கலக்கும் மோகன்லால் , பேய்க்கு பயப்படும் சீனிவாசனுடன் செய்யும் காமெடி- கலக்கல். இன்றும் ஏசியாநெட்டில் போட்டால் தவறாது இப்படத்தை பார்த்து விடுவேன். இப்படத்தை மாற்றி சந்திரமுகி என எடுக்கிறார்கள் என்றால் எனக்கு பயமாகத்தானிருக்கிறது.இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி கிடையாது. டூயட்கிடையாது.இடைவேளையின் போதுதான் அறிமுகமாவார். சண்டைக்காட்சிகள் கிடையாது . மோகன்லாலின் பாத்திரத்தை ரஜினி செய்யும் பட்சத்தில், எவ்விதமான மாற்றங்களை திரைக்கதையில் செய்யப் போகிறார்கள்.

இப்படத்தை தமிழில் எடுப்பதைக் குறித்தும், அதில் ரஜினி நடிப்பதைக் குறித்தும் இரு கேள்விகள் என்னுள் எழுகின்றன.

ஒன்று, கேரளப் பிண்ண்னியில் அமைந்ததால், அமானுட ரீதியான கதைகளில் ஒன்ற முடிந்தது. இதை தமிழகப் பிண்ணனியில் அமைக்கும் போது எந்த அளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? தமிழகத்தில் அமானுடப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இரண்டு ரஜினிக்காக மோகன்லால் பாத்திரத்தில் மாறுதல் செய்யப்பட்டு, டூயட், சண்டை என்று சேர்க்கப்பட்டால் கதைக் கலன் சிதைந்து விடும். இதை எவ்வாறு தவிர்ப்பார்கள்?"தேன்மாவு கொம்பத்து" என்ற படத்தை சிதைத்துத்தான் "முத்து" எடுத்தார்கள். ஆனால் முத்துவை ரஜினி பட இலக்கணத்திற்கேற்ப மாற்ற முடிந்தது.

இப்படிப்பட்ட கதைக்கு ரஜினி ஒப்புக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. வித்தியாசமான ரோல் செய்ய அவர் ஆசைப்படுகிறாரா? அல்லது 'அன்புள்ள ரஜினிகாந்தில் வந்ததைப் போல, கதாநாயகத் தன்மையற்ற ரோலை செய்ய விரும்புகிறாரா?

இது எப்படிப்பட்ட படம் என்பதை ரஜினி முதலிலேயே தெளிவுபடுத்தி விடுவது நல்லது. அதற்குள்ளாகவே யாஹ¤ குழுமத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ரஜினி ரசிகனும், ரஜினிக்கென்று மானசீக கதை வைத்திருப்பதாக எனக்கு படுகிறது. ரஜினி கால்க்ஷ£ட் கொடுத்தால் இயக்குநராகவே மாறி விடுவார்கள்.

படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெளிவாகச் சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை கட்டுப்படுத்துவது நல்லது. பாபாவையே சாமி படம் என்று சொல்லியிருந்தால் கட் அவுட்டிற்கு பாலூற்றி படம் பார்த்து வந்திருப்போம் என்றார் சக ரசிகர் ஒருவர். சமூகப் படமாகவும் இல்லாமல், சாமிப்படமாகவும் இல்லாமல் கலவையாக இருந்ததால் கலங்கிப் போனார்கள் ரசிகர்கள்.( 300 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

மணிச்சித்திரதாழ் தான் சந்திரமுகியாக மாறுமா? என்பதில் இன்னும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. வாசு ரஜினிக்காக வேறு ஏதாவது கதை பண்ணுவார் என நம்புகிறேன்.

அப்படி இல்லாத பட்சத்தில், விபரீதமான முயற்சி என்றே ரஜினி ரசிகனான எனக்கு படுகிறது."ஆயிரம் ஜென்மங்கள்" போல ஒரு படத்தை தற்பொழுது ரஜினி வெளியிட்டால் எடுபடுமா?

விடை ரசிகர்கள் கையில்

Rajkumar
Courtesy : http://poetraj.blogspot.com/

29.9.04

ரஜினிகாந்த் கற்றுத்தந்த நல்ல வழிகள்!

சில படித்தவர்களும், அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பது ஒரு சமுதாய குற்றம் என்ற பிரம்மையை ஏற்படுத்த தொடங்கியிள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உறுப்பினராய் இருந்து அழிவதை விட ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பது குற்றமில்லை. இந்த விசயத்தில் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தன் ரசிகர்களை வன்முறைக்காகவும், தனக்கு சாதகமாவும் பயன்படுத்துவதில்லை. அன்றிலிருந்து, இன்றுவரை ரசிகர்களுக்கு அவர் சொல்லித் தந்தது தனக்கு ரசிகனாய் இருப்பவன் முதலில் தன் குடும்பத்திற்கு நல்ல மகனாய் இருக்க வேண்டும் என்றுதான். சிறிய வயதிலேயே அரசியல் எனும் சூதாட்டத்தால் படிப்பையும் இழந்து, நல்லதோர் வாழ்க்கையும் இழந்து தவிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணக்கிலடங்காதது. இன்றைய ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை நன்றாக சிந்திக்கும் பருவத்தை அடைந்தவர்கள். குடும்பத்தை காப்பாற்றுமளவிற்கு தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ரஜினியின் படங்கள் வருகிறது. அந்த நாட்களில் அவரின் நடிப்பைக் கண்டு எல்லோரும் ரசித்து மகிழ்கிறார்கள். மனதை மகிழவைக்கும் கலைஞனை வாழ்த்துவதும், ரசிப்பதும் நம் இரத்தத்தில் கலந்த ஒன்று. படம் பார்த்தோம், ரசித்தோம், குடும்பத்தை கவனித்தோம், தங்களால் இயன்ற அளவிற்கு சமுதாயப் பணிகளை செய்தோம் என்றிருந்த ரசிகர்களை வன்முறை பாதைக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள். தொண்டை கிழிய மேடைக்கு மேடை பொய் தவிர வேறு எதும் பேச தெரியாத அரசியல்வாதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் நோட்டிஸ் அடித்தும், கட் அவுட் வைத்தும் அலங்கரிக்கும் அவலத்தைவிட, தங்களின் சொந்த வருமானத்தில் சுயநலமின்றி ரஜினிக்காக நோட்டிஸ் அடிப்பது எந்த விதத்தில் குற்றமாகும்? தவறான பாதைக்கு இளைஞர்களை இழுத்து செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மதம், இனம் பார்க்காமல் தியானம் செய்யுங்கள் கோபத்தை அடக்கி ஆளலாம் என அறிவுரை சொல்லும் ரஜினிகாந்தின் பின் செல்வது எப்படி தவறாக முடியும்? உயிர் நீத்த தொண்டர்களின் சமாதிகளில் ஈரம் உலரும் முன்னே கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு முன்னர், தன் கொள்கை இறந்தாலும் பரவாயில்லை தன் ரசிகர்கள் காக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு கருதி அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் ஆதரவாய் தன் ரசிகர்களை தேர்தலில் செயல்படுத்திய ரஜினிகாந்த்தின் நேர்மைக்காக அவருக்கு ரசிகராய் இருப்பவர்கள் பெருமைப்பட வேண்டும். காவிரிக்காக அமைதியான முறையில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்த போது தர்மம் காக்கப்பட்டது, பாபா படத்திற்காக பாமகவின் வன்முறையை சட்டத்தின் வழியே சந்திப்பேன் என கூறியபோது சட்டம் காக்கப்பட்டது, முடிவாய் ரசிகர்கள் பாமவினரால் தாக்கப்பட்ட நேரத்தில் ஜனநாய முறையில் தேர்தலில் எதிர்ப்பு தெரிவிக்க சொன்னபோது ஜனநாயகம் காக்கப்பட்டது. ரஜினிகாந்த்தின் நடிப்பை மற்றும் ரசித்து யாரும் ரசிகராகவில்லை அவரின் நேர்மையான மனதை புரிந்தும்தான் ரசிகர்களாய் இருக்கிறார்கள். விடிகின்ற ஒவ்வொறு பொழுதிலும் எங்கேயாவது ஒரு ரசிகன் தன் சமுதாயப்பணிகளை செய்துக்கொண்டுத்தான் இருக்கிறான். ஒரு மூன்று வயது சிறுமிக்கு தக்க சமயத்தில் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றி வந்த செய்தியை ரஜினிகாந்த் அறிந்தால், கண்டிப்பாய் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாயின் மகிழ்வை ரஜினிகாந்த அடைவார். எல்லா ரசிகர்களும் தன் குடும்பத்தையும் காத்து, இந்த சமுதாயத்துக்கு தன்னாலான உதவிகளை செய்யவேண்டும் என்கின்ற எண்ணத்தை தன் ரசிகர்களுக்கு தந்த இந்த நல் மனிதனுக்காக நம் வாழ் நாள் முழுதும் விளப்பரம் செய்வதும், பேனர் கட்டுவதும் தவறில்லை. இருள் சூழும் இடமெல்லாம் ரஜினி ரசிகர்கள் ஒரு சிறிய மெழுகுவர்த்தியாய் சமுதாய பணிகள் மூலம் வெளிச்சத்தை கொண்டுவருவார்கள் என்பதில் ஐய்யமில்லை. ரஜினிகாந்த் சொல்லித் தந்த அகிம்சை எனும் மந்திரத்தை என்றும் கடைபிடித்து, இந்த சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே ஒவ்வொரு ரசிகர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்.

மா. இரவிசங்கர்
On Behalf of wwww.rajinifans.com

28.9.04

புதிய் வேகத்துடன், புதுப் பொலிவுடன் - சந்திரமுகி

தமிழ்புத்தாண்டை புத்துணர்ச்சியாய் கொண்டாட சூப்பர் ஸ்டார் தந்த பரிசுதான் சந்திரமுகி. வரும் புத்தாண்டிலிருந்து அடுத்த புத்தாண்டு வரை சந்திரமுகி நாடெங்கும் பேசுப்படட்டும். குழம்பிய கண்ணோட்டத்தில் பார்த்தால் சூப்பர் ஸ்டாரின் பாதை குழப்பமாகத்தான் தெரியும். தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சூப்பர் ஸ்டாரின் பாதை தெளிவாய் தெரியும். குழப்பத்திலிருந்து மீண்டு தெளிவான பாதைக்கு சில நண்பர்களை அழைக்கிறேன். என் கூட இருக்கிற கூட்டம் அன்பால சேர்ந்த கூட்டம் என்பதிற்கிணங்க ஒன்றுபட்டு நிற்போம். சூப்பர் ஸ்டார் படத்தின் தொடக்க விழா, பொறாமையாய் அலைந்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு முடிவு விழாவாக அமையட்டும். நம் படைத்தோழர்களே தயராயிருங்கள். நாடங்கும் விரைவில் பறக்கப் போகும் நம் கொடியை காணத் தயராயிருங்கள். ரஜினி ரசிகர்கள் என நாம் கூறி பெருமைப்படுவதை விட எல்லா மக்களும் நம்மைப் பார்த்து பெருமைப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதின் உண்மையை அறிந்திடுங்கள். கஷ்டகாலம் முடிந்துவிட்டது இனி வரும் நாளெல்லாம் நம் வெற்றி நாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

புதிய் வேகத்துடன், புதுப் பொலிவுடன்

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

24.9.04

ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய தாஜ்மகால்

திருநெல்வேலியை மாவட்டமாக கொண்ட தென்காசிக்கு சற்று அருகே புல்லுக்காட்டு வலசை எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்கு அதிகமான பேருந்து வசதிகள் கிடையாது. என்னுடைய பனிரெண்டாவது வயதில் நான் அந்த கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அங்கே பேருந்து நிற்கும் இடத்தில் ஒரு சிறிய நிழற்குடை ரஜினிகாந்த் ரசிகர்களால் அந்த கிராம மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்ததை காண நேர்ந்தது. அந்த நிழற்குடையின் திறப்பு விழாவிற்காக நம் தளபதி சத்திய நாராயணா அவர்கள் வந்திருந்தார்கள் என்பதையும் நான் அறிந்தேன். கிராமத்திய இளைஞர்களை சமூக நலனில் அக்கறையுள்ளவர்களாக மாற்றியதில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த கிராமமே நன்றிப்பட்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்ய முடியாததை ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எல்லா ரசிகர்களும் பெருமைப்பட வேண்டும். ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் இளைய சமுதாயத்தை பாதிப்பதாக குறை சொல்லும் அரசியல்வாதிகளுக்கு, இந்த கிராமத்து இளைஞர்களின் சமூக சேவை ஒரு பாடமாக அமையட்டும். பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த கிராமத்திற்கு சென்ற வருடம் டிசம்பரில் சென்றிருந்தேன். அந்த கிராமத்திற்கு அடியெடுத்த முதலே என் மனம் அந்த நிழற்குடையை பார்க்க துடித்தது. அழகாய் வெள்ளையடித்தபடி, ரஜினி ரசிகனான எனை வரவேற்றபடி அமைந்திருந்தது அந்த நிழற்குடை. அதைக் கண்டவுடன் மனதிலே இனம் புரியாத சந்தோசம். சற்றே அந்த நிழற்குடைக்குள் இளைபாறிவிட்டு திரும்புகையில் என் மனதோடு சேர்ந்து, என் நிழலும் என்னுடன் வர மறுத்தது. ரஜினிகாந்த் அவர்களின் மேல் உள்ள எல்லையில்லா அன்பால் அமைக்கப்பட்ட அந்த நிழற்குடை, என் நிழலுக்கு உணர்ச்சிகளை சொல்லித் தந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது நிழற்குடை அல்ல, அந்த கிராம மக்களுக்காக ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய தாஜ்மகால் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை வருடங்கள் கழித்தும் அதை சரியாக பராமரிப்பதை கண்டபோது ரஜினிகாந்த் ரசிகனாய் இருப்பதில் பெருமையடைந்தேன். அதே சமயம் எங்கோ ரஜினியின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்டு என் மனம் திரும்பிப்பார்த்தது. அக்கம் பக்கம் விசாரித்ததில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் விழா அங்கே கொண்டாடிக் கொண்டிருப்பதாக தெரியவந்தது. எல்லையில்லா இன்பத்திற்குள் என் மனது சிக்கி தவித்த நாளாய் அன்றைய தினம் அமைந்தது. படித்த இளைஞர்களின் மனதிலும், படிக்காத இளைஞர்களின் மனதிலும் சமுதாய சேவைகள் எனும் விதையை விதைத்த ரஜினிகாந்த் அவர்களின் இதைப்போன்ற சாதனைகள் தமிழ்நாட்டின் ஒவ்வொறு கிராமத்திலும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தன் எல்லா ரசிகர்களையும் சாதனையாளர்களாக மாற்றுவதுதான் ரஜினிகாந்த் அவர்களின் லட்சியமோ? தான் சாதித்து, தனை சார்ந்தவர்களையும் சாதனையாளர்களாய் உருமாற்றிய ரஜினிகாந்த் அவர்களின் லட்சியம் தொடரட்டும். ரசிகர்களின் முயற்சியில் சமுதாய கடமைகள் நம் மண்ணில் செழிக்கட்டும். சாதனைகளை வாழ்த்துவோம்! சாதனையாளர்களை வாழ்த்துவோம்!

குறிப்பு: இந்த கிராமத்தில் மட்டுமல்ல இதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் இதைப் போன்ற நிழற்குடை ரஜினிகாந்த் ரசிகர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

16.9.04

தேசிய நீர்வழித் திட்டம்

சென்னையின் தண்ணீர்க் கஷ்டத்துக்கு என்னதான் தீர்வு? கடல் நீரைக் குடிநீராக்குவது ஒரு வழி. லிட்டருக்கு நூறு ரூபாய் ஆகும். இன்னொரு வழி, மிகப்பெரிய ஐஸ்கட்டிப் பாளங்களை கப்பல் மூலம் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மாதா மாதம் கொண்டு வருவது. இதற்கு மைனஸ் 140 டிகிரியில் கொண்டுவரக் கூடிய ராட்சஸ டாங்கர் கப்பல்களை கொரியா சாம்சங்கிடமிருந்து வாங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டே ‘நதிகளை இணைக்க ஏதாவது செய்யுங்கள்’ என்று ஆணையிட்டுவிட்டது. அப்துல் கலாமின் 2020 கனவும் இஃது! நமது அரசியல் சட்டத்தில் (ஆர்ட்டிக்கிள் 246, ஏழாவது ஷெட்யூல்) இதற்கு இடம் இருக்கிறது. சுதந்திரம் வந்ததிலிருந்து நதிகளை இணைப்பதற்கான பற்பல திட்டங்களை யோசித்து யோசித்து கமிட்டி அமைத்து, கூடிப்பேசி இதுவரை 15,678 பக்கம் ரிப்போர்ட்டுகள் எழுதிவிட்டோம். கடைசியாக தேசிய நீர்வழித் திட்டம் ( நேஷனல் வாட்டர்வேஸ் ப்ராஜெக்ட்) என்ற அமைப்பில் இன்ஜினீயர் ஏ.சி.காமராஜ் அவர்கள் முன்வைக்கும் திட்டம், மனமிருந்தால் பணமிருந்தால் சாத்தியம் என்று தோன்றுகிறது.

இந்தத் திட்டத்தில், பிரம்ம புத்ராவிலிருந்து தாமிரபரணி வரை அனைத்து நதிகளையும் கால்வாய்கள் மூலம் இணைத்து, அவற்றில் வெள்ளம் வரும்போது மட்டும் வழியும் தண்ணீரை அங்கங்கே சேமித்து, கால்வாய்களை ஏற்ற இறக்கமின்றி சமதரையில் அமைத்து, எங்கே வெள்ளமோ அங்கிருக்கும் உபரிநீரைப் பற்றாக்குறைப் பகுதிக்கு இருதிசையிலும் அனுப்பும்படியான ஏற்பாடு... கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுத்தாலும், பருவமழை அதிகமாகி அணைகளில் வெள்ளம் வழிந்து தரம்சிங்கையும் மீறி, மேட்டூருக்கு இந்த வருஷம் தண்ணீர் வந்ததுபோல!

600 மீட்டரிலிருந்து துவங்கி நாடெங்கிலும் பெரும்பாலும் 300 மீட்டரிலேயே, சம தளத்திலேயே சுமார் 15,000 கிலோமீட்டருக்குக் கால்வாய்கள் அமைக்கவேண்டும் (இது துணைக்கண்டத்தின் ஏற்ற இறக்க ஜியோகிரஃபியில்கூட சாத்தியம் என்கிறார் காமராஜ்). போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் என மூன்று பிரச்னைகளையும் தீர்க்கலாம்என்கிற பேராசைமிக்க திட்டம்இது. வருஷா வருஷம் கடலில் விரயமாகப் போய்ச்சேரும் வெள்ளப்பெருக்கில் முப்பது விழுக்காட்டை இவ்வாறு தேக்கினாலே போதுமாம். அதிகம் செலவாகாது. ஐந்து லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் இருந்தால், பத்து வருஷத்தில் கட்டிவிடலாம் என்கிறார் காமராஜ். நான் நூறு ரூபாய் அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

Courtesy : Sujatha @ Ananda Vikatan

13.9.04

சரணடைந்த கஜேந்திரா

கள்ளக்குறிச்சியில் திருமணவிழாவினை தலமையேற்க சென்ற விஜயகாந்த் மணமக்களை வாழ்த்திய கையோடு கொஞ்சம் அரசியல்வாதிகளையும் கிண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததின் விளைவு இன்று கஜேந்திரா பட தயாரிப்பாளரை பாமக தலைவரிடம் சரணடையவைத்துவிட்டது. கண்ணீர் வராத குறையாய் துரை அளித்த பேட்டியிலிருந்து அவரின் பாதிப்பை புரிந்துக்கொள்ளலாம். பாமகவின் வன்முறை பற்றி முழுதாய் அறிந்தபோதிலும் விஜயகாந்த் அரசியல் பேசியது வீண் வம்பை விலை கொடுத்து வாங்கியது போல் ஆனது. பத்திரிக்கைகளில் பரபரப்பாய் செய்தி வரவேண்டும் என்கின்ற ஆவல் அவரை பேசத்தூண்டியிருக்கலாம் என்பது என் எண்ணம். கோடிக்கணக்கில் பணத்தை வட்டிக்கு புரட்டி படம் எடுத்த துரை அவர்களின் அணுகுமுறை 100 சதவீதம் சரியானதுதான். தர்மம் காக்க கஜேந்திரா புறப்பட்டுவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். விஜயகாந்த்தின் தர்மம் கஜேந்திரா திரைப்பட தயாரிப்பாளரை கூட காக்க முடியாமல் போனது. இந்த தயாரிப்பாளரின் நிலையை சிறிதும் சிந்திக்காமல் பேசிய இவரின் அரசியல் ஒத்திகை தேவைதானா? மேடை பேச்சோடு முடித்துக்கொள்ளாமல் ஜூனியர் விகடனில் அளித்த பேட்டியிலும் பாமகவை இவர் தீண்டியது அவசியம்தானா? இவரைப்பற்றி புகழ்ந்த பத்திரிக்கைகள் இன்று இவரின் நிலையை இகழ்ந்து பேசுகிறது என்பதை விஜயகாந்த் தெரிந்து கொள்வாரா? தன் பலம் தனக்கு தெரியும் என தன்னைப்பற்றி தானே புகழ்வதே விஜயகாந்த்தின் பலவீனம். ரஜினிகாந்த்தைப்பற்றி தவறாய் பாமக தலைவர் பேசியபோதும் அவர் கடைபிடித்தது அமைதி, கடைபிடிக்க சொன்னதும் அமைதி. பாபா திரைப்படம் திரையிடவிடாமல் நான்கு மாவட்டங்களில் தடுக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மட்டுமே தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தார். தன்னால் மக்களும், ரசிகர்களும் பாதிப்படையக் கூடாது என்பதுதான் அவரின் விருப்பம் என ஆணித்தரமாக சொல்பவர். இதை கருத்தில் கொண்டுதான் காவிரி தண்ணீர் வேண்டி அவர் நடத்திய உண்ணாவிரதமும் அரசாங்க விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டது. ரஜினிகாந்த் விசயத்தில் வன்முறைக்கு முழு காரணம் பாட்டாளி மக்கள் கட்சிதான். ஆனால் விஜயகாந்த் விசயத்தில் வன்முறைக்கு முழுக்காரணமும் விஜயகாந்த் மட்டுமே. பாபாவின் தயாரிப்பாளராய் ரஜினிகாந்த் இருந்ததனால் பாமகவின் வன்முறை விநியோகஸ்தர்களை மட்டுமே பாதித்தது. இதற்கு ரஜினிகாந்த்தே பொறுப்பேற்று பணத்தை திருப்பி செலுத்தி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அனைவரையும் சந்தோசமடைய செய்தார். இதே நிலையை விஜயகாந்த்தும் கடைப்பிடித்திருப்பாரேயானால் தயாரிப்பாளர் துரை அவர்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. இந்த படத்திற்காக விஜயகாந்த் தனது சம்பளப் பணத்தை கொஞ்சமும் பாக்கி வைக்காமல் வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பாளர் நொந்து போய் பேட்டியளித்திருக்கிறார். தயாரிப்பாளர் துரை அவர்கள் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்தது விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விஜயகாந்த்துக்கும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. தயாரிப்பாளர் துரை விஜயகாந்த்தை அவமானப்படுத்திவிட்டதாக விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசமாய் பேட்டியளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ராமாதாஸ¤டன் சரணடைந்ததால் விஜயகாந்த் ரசிகர்களே கஜேந்திரா திரைப்படத்தை பார்க்காமல் தயாரிப்பாளர் துரைக்கு பாடம் கற்பிக்க நேரிடலாம். இப் படத்தை ஓட விடாமல் பாமக செய்ய நினைத்த யூகங்களை விஜயகாந்த் ரசிகர்களே இப்போது செய்ய நினைத்திருப்பதை கண்டு, பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் மனம் மட்டுமே தற்போது சந்தோசத்தால் பூத்திருக்கின்றது.

மா. இரவிசங்கர்
On behalf www.rajinifans.com

8.9.04

மரியாதை குறையாமல் இருந்தாலே எங்களுக்கு போதும்

வணக்கம்

பல கோடி மக்களை தங்களுடைய கண்ணிலிருந்து வரும் காந்தம் தங்களை பற்றி நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தது 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது தான்,அதாவது முத்து படம் வெளியான நேரத்தில்; ஏனென்றால் அந்த நேரத்தில் தான், அரசியல் வல்லுனர்களின் கண் உங்கள் மேல் திரும்பியது.அதுவரை மற்ற நடிகர்களை போல் தான் தங்கள் படங்களையும் பார்த்திருக்கிறேன்.அதன் பிறகு தங்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.தங்களின் ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கையை பற்றி சிலர் கூறினார்கள்.தவறு செய்வது மனித இயல்பு, செய்த தவறையே திரும்ப திரும்ப செய்பவன் மிருகம், அதை திருத்தி கொண்டு வாழ்பவன் தான் மனிதன்.அந்த வகையில் நீங்கள் ஒரு மாமனிதர் என்பதை அறிந்தேன். ஆனால் நான் தங்களின் ஆரம்ப கால கட்ட திரைப்பட வாழ்க்கையை பற்றி கவலைபடவில்லை.ஏனென்றால் முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்பதை தான் அறிய விரும்பினேன். “நதி மூலமும் ரிசி மூலமும் பார்க்க கூடாது” என்பார்கள் நான் உங்களை ரிசியாகவே பார்க்கிறேன்.

தங்களுடைய அடுத்த திரைப்படம்; எப்போது வரும் எப்போது வரும் (ஜக்குபாய்) என்று இப்போதும் ஆவலுடன் காத்திருப்போர் கோடிக்கணக்கானோர்.1995 ஆம் ஆண்டு முத்து படம் வெளியான நேரத்தில் நம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. அந்த கேள்விக்கு பெரும்பாலானோர் அளித்த பதில் சூப்பர் ஸ்டார்(இதே வாய்ப்பு முன்பு ஒரு முறை மக்கள் திலகத்துக்கு கிடைத்தது. அதை அவர் தக்க வைத்து கொண்டார்). ஆனால் தங்களின் அறிக்கை பல கோடிக்கணக்கான ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றம் அடைய செய்தது. “அரசியல் ஒரு சாக்கடை” புது கட்சி ஆரம்பித்தால் புது இரத்தம் பாய்ச்ச முடியாது, அதே பழைய ஊழல் நிறைந்த ஆட்சி தான் நடத்த முடியும.; ஆதலால் புது கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை என்று தாங்கள் அன்று அறிக்கை விடுத்தீர்கள். நீங்கள் அன்று அவ்வாறு அறிக்கை விடுத்ததற்கு காரணம் இருந்தது, ஏனென்றால் அன்றைய அரசியல் வாதிகளில் பலர் நீங்கள் புது கட்சி ஆரம்பித்தால் பஸ்சில் சீட் பிடிக்க துண்டு போடுவதை போல் தங்கள் கட்சியில் தாவுவதற்கும் தயாராக இருந்தார்கள்.

அன்றைய சூழ்நிலையில் தாங்கள் புது கட்சி ஆரம்பிக்காதது எங்களுக்கு சிறு வருத்தமே இருந்தாலும், ஒரு வேளை நீங்கள் புது கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று(நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பீர்கள்)முதல்வர் ஆகியிருப்பீர்கள். நீங்கள் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.உங்களது கட்சியில் உள்ள ஏதாவது அமைச்சர்கள் தவறு செய்தால் அது நிச்சயமாக உங்களை பாதித்திருக்கும். யார் ஆட்சி நடத்தினா என்ன யார் வந்தாலும் “அதே பழைய குருடி கதவை திற” என்ற நிலைமை தான் என்று மக்கள் உங்களை தவறாக பேசி இருக்க கூடும். நீங்கள் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை உங்களை பற்றி மக்கள் வைத்திருக்கும் அந்த மரியாதை குறையாமல் இருந்தாலே எங்களுக்கு போதும்.இருந்தாலும் ஒரு வேளை உங்களால் தமிழகத்தை பொன்வளமாக மாற்றுவதற்குரிய வாய்ப்பு 1996 ஆம் ஆண்டு கிடைத்தும் அதை நழுவ விட்டீர்களோ என்ற தாகமும் உள்ளது.
இப்படிக்கு உங்கள் ரசிகன்
மணிமுத்தாறு ப.ராதாகிருஷ்ணன்.

7.9.04

ஜக்குபாய் ஒரு பார்வை

தேர்தல் நேரத்தில் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது இப் படத்தின் அறிவிப்பு. இறைவா நண்பர்களிடமிருந்து எனை காப்பாற்றிவிடு, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் எனும் வாசகத்தோடு கையில் ஆயுதம் தாங்கி, அநீதியை அழிக்க சூப்பர் ஸ்டார் புறப்படுவது போல் வந்த விளம்பரம் எல்லோர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பின்னே ஜக்குபாய் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் மங்களகரமான நாள் இல்லததால் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக சூப்பர் ஸ்டாரே குமுதம் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் ஆகஸ்டு மாதத்தில் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதின் காரணம் அதிகாரபூர்வமாக வெளிவராதது ரசிகர்களுக்கு மிகுந்த குழப்பத்தை தினம், தினம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த ஒரு அறிவிப்பும் சூப்பர் ஸ்டார் தரப்பிலிருந்து வராததுதான் இவ் வதந்திகளுக்கு பெரிய காரணம். ஜக்குபாய் படத்தின் கதாநாயகியில் தொடங்கி, படத்தின் கதை வரை எல்லா தினசரி நாளிதழ்ளும், பத்திரிக்கைகளும் எழுதும் வதந்திகள் கணக்கிலடங்காதது. படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இத் திரைப்படத்தை பற்றி வரும் செய்திகளை பார்க்கும்போது ஜக்குபாய் படத்திற்கு விளம்பரம் செய்யவேண்டிய அவசியம் நேரிடாது எனத்தான் தோன்றுகிறது. ஜக்குபாய் திரைக்குவந்து கலக்கப்போவது தைப்பொங்கள் தினத்திலா அல்லது தமிழ்புத்தாண்டிலா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ வெகு விரைவில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய நற் செய்தியை சூப்பர் ஸ்டார் அறிவிப்பார் என்பது நிச்சயம்.
மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

6.9.04

ராமதாஸம் சினிமாவும்

"சினிமாவை எதிர்த்து குரல் கொடுத்தால் வேறு வேலை இல்லையா என்கிறார்களே? " என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாதந்திர கூட்டத்தில் பேசும்போது டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். டாக்டர் சினிமா நடிகர்கள் தவிர மற்றப் பிரச்சனைகளைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் யார் அவரை குறை கூறப் போகிறார்கள்? தன்னுடைய சுயவிளம்பரத்திற்காகவும், சில நடிகர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமலும் தான் டாக்டர் ஐயா, சினிமா நடிகர்களான ரஜினி மற்றும் விஜயகாந்தை கண்டபடித் திட்டிக்கொண்டிருந்தார்.. திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ரஜினியால் தான் தமிழக மக்கள் அனைவரும் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டதைப் போலப் பேசியே பாபா திரைப்படத்தை ஓடவிடாமல் தகராறு செய்தார். அவரது நல்ல நேரமோ, ரஜினியின் கெட்ட நேரமோ பாபா படுத்துவிட்டது. விட்டேனா பார் என்று அடுத்ததாக விஜயகாந்த் மீது தாக்குதல் கணையைத் தொடுத்தார். விஜயகாந்தின் படத்தை ஓடவிடாமல் செய்ய திருட்டு வி.சி.டி தயாரித்து வினியோகம் செய்வோம் என்று பகிரங்கமாக அவரது தொண்டர்கள் அறிவித்தனர். டாக்டர் ஐயா மட்டுமல்லாது மற்றொரு டாக்டரும் ஏதோ பெரிய சமூக சிந்தனை உள்ளவரைப் போல கமல் படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுவது எல்லாம் பரபரப்பு.. அவ்வளவே. கொஞ்ச நாளில் தாங்கள் என்ன பேசினோம் என்ற நினைவே இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

நடிகர்களை மையமாக வைத்து விளம்பரம் தேடும் இவர்களைப் போன்ற தலைவர்கள் நாட்டில் நடக்கும் மற்ற பிரச்சனைகளை கண்டுகொள்வதே கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. நதிநீர் இணைப்புப் பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்துவிடும் பிரச்சனை, வழக்கறிஞர்கள் பிரச்சனை என்று நாட்டில் எத்தனை பிரச்சனைகள்? அவை எல்லாம் டாக்டர் ஐயாவின் கவனத்திற்கு வராமல் போய்விட்டதே. இதை என்னவென்று சொல்ல? பாபாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஒரு சிறு பங்கைக் கூட பா.ம.க வேறு எந்த மக்கள் பிரச்சனைகளுக்காகவும் நடத்தியது கிடையாது.

ராமதாஸ் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கும் சினிமா நடிகர்களுக்கும் எதிராக தாராளமாகக் குரல் கொடுங்கள். ஆனால் நீங்கள் பேசும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளா என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். பிறகு பேசுங்கள். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் நீங்கள் வெட்டிய மரங்களுக்காக இப்போது நடத்திக்கொண்டிருக்கிறீர்களே பசுமைத் தாயக இயக்கம்.. அதைப்போலவே சினிமாவிற்கு ஆதரவாக வேறு ஒரு இயக்கம் தொடங்கவேண்டியிருக்கும்.
சினிமாவைத் தவிர வாழ்க்கையில் பல முக்கிய பிரச்சனைகள் மக்களுக்கு இருக்கின்றன. அவைகளையும் சற்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் உங்களது நல்ல காலம் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் காலம் உங்களுக்கு ஒத்தாசை செய்யும் என்ற பகற்கனவை விட்டுஒழியுங்கள். உண்மையாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வவேண்டியதுதான்.
மீனா