17.10.07

சேது தீர்வு கலைஞர் கையில் - ரஜினி

Photo Sharing and Video Hosting at Photobucket



2005 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. நான் இன்று பகல் 12 மணிவரை வெள்ளை தாடி&வெள்ளை தலைமுடியுடன்தான் இருந்தேன். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இரண்டு பேரும், நீங்கள் வெள்ளை தாடி&மீசையை எடுத்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொண்டால்தான் விழாவுக்கு வருவோம் என்று கூறினார்கள். இப்படியே நீங்கள் விழாவுக்கு வந்தால், வீட்டில் ஏதோ பெரிய பிரச்சினை இருக்கும் போல் தெரிகிறது. அதனால்தான் ரஜினி இப்படி வெள்ளை தாடி&மீசையுடன் இருக்கிறார் என்று பேசுவார்கள். அதனால் தாடி&மீசையை எடுத்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.சரி, இது எங்கிருந்து வந்திருக்கும் என்பதை நான் புரிந்துகொண்டு, என் மகள்கள் கேட்டுக்கொண்டபடி வெள்ளை தாடி&மீசையை எடுத்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொண்டேன்.நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமானால், ஜனங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் என்றால், நல்ல படங்கள் எடுக்கணும். அந்த படங்கள் நன்றாக ஓடணும். படங்கள் ஓடினால்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கும். அந்த மாதிரி நல்ல படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், அதில் நடித்த நடிகர்&நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை செய்ய தமிழ்நாடு அரசும், கலைஞரும் விருது கொடுக்க முன்வந்து இருக்கிறார்கள்.இவர்களுடன் எனக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைப்பது, சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பாக, 32 ஆண்டுகளுக்கு அப்புறமும் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைப்பதில், சந்தோஷம்.சில பேர் நினைக்கலாம்... சந்திரமுகி படத்தில் ஜோதிகா நன்றாக நடித்தார், வடிவேல் நன்றாக நடித்தார். ரஜினிக்கு ஏன் விருது கொடுக்கிறார்கள்? என்று. சந்திரமுகியில் சரவணனாக நடித்த ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவில்லை. வேட்டையனாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இது, கலைஞருக்கு தெரியும்.25 அல்லது 26 ஆண்டுகளுக்குப்பின், நடிப்பு பற்றி நான் கொஞ்சம் சிந்தித்து நடித்தபடம், சந்திரமுகிதான். நடிப்புக்காக கொஞ்சம் நேரம் எடுத்து நடித்த படம். அந்த படத்தில் நடித்தபோது, உடன் நடித்த விஜயகுமார், வடிவேல் ஆகியோர் கேட்டார்கள். கிளைமாக்சில் சண்டை கூட இல்லை. என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.3 நிமிடம்தான் அந்த காட்சி. அதில், நான் நடித்து பெயர் தட்டிட்டு போயிடணும். பதினைந்து, பதினாறு ஷாட். ஒவ்வொரு ஷாட்டிலும் வேறு வேறு மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்தணும். எப்படி நடிக்கலாம்? என்று யோசித்தேன். அவுரங்கசீப்பின் வரலாறை படித்தபோது, கிடைத்தது. அவுரங்கசீப் காலத்தில், அரவாணிகள் மாதிரி மிகப்பெரிய வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் இன்ஸ்ப்ரேஷன்தான், சந்திரமுகியில் நான் நடித்த வேட்டையன் பாத்திரம். எல்லோருக்கும் பிடித்து இருந்தது.அந்த கதாபாத்திரத்தின் நடிப்புக்காக விருது கிடைப்பதில், மிக்க மகிழ்ச்சி. சந்தோஷப்படுகிறேன். பருத்தி வீரன் படத்தில் கார்த்தி&ப்ரியாமணி நடிப்பு பற்றி நான் இங்கே பேசவேண்டும். நூறு, இருநூறு படங்களில் நடித்தபின் கிடைக்கும் அனுபவமும், முதிர்ச்சியும் கார்த்தி நடிப்பில் தெரிந்தது. சூப்பர். குறிப்பாக, கடைசி காட்சியில் ப்ரியாமணியின் பிணத்தை பார்த்து கதறி அழுதபோது, ஹாட்ஸ் ஆப்.அதேபோல் ப்ரியாமணியும் மிக சிறப்பாக நடித்து இருந்தார். அமீர் டைரக்ஷன் அருமையாக இருந்தது.பொதுவாக, வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம். வாய்ப்பு என்பது, தவம் மாதிரி. சில நேரங்களில் வாய்ப்பு அதுவாக நம்மை தேடி வரும். சில நேரங்களில் வாய்ப்பை தேடி நாம் போகவேண்டும். அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.விஜய்க்கு காதலுக்கு மரியாதை, குஷி. அஜீத்துக்கு காதல் கோட்டை, வாலி. விக்ரமுக்கு சேது, அந்நியன். இத்தனை சாதனைகள் புரிந்த ஜாம்பவான்கள் இங்கே இருக்கிறார்கள்.பெரியார் படம் பார்த்தபின்தான், சில தெரியாத விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். உடனே கி.வீரமணிக்கு ஒரு கடிதம் எழுதினேன். இங்கே நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. சிலர் என்னிடம், பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா, இப்படி பேசலாமா? என்று கேட்டார்கள்.பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பத்துவிதமான பண்டங்கள் உள்ளன. அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது? தீண்டாமை, சாதி ஒழிப்பு என பல நல்ல கொள்கைகள் இருக்கிறதே...நான் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுக்காமல், நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன். பத்துவிதமான பண்டங்களில், எனக்கு பிடித்த பண்டங்களை எடுத்துக்கொண்டேன்.கலைஞர் எழுதிய மந்திரி குமாரி திரைக்கதையை படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த திரைக்கதையை வைத்துக்கொண்டு, நான் கூட டைரக்டு செய்து விடலாம். அத்தனை தெளிவாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பு, உடையலங்காரம், செட் ஆகிய அம்சங்கள் ஒரு அடித்தல்&திருத்தல் இல்லாமல் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற குறிப்பு எழுதப்பட்டு இருந்தது.அந்த படத்தை பார்த்தபோது, கலைஞரின் திரைக்கதை அப்படியே இருந்தது.பல வருடங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர் என்னை வந்து சந்தித்தார். இலங்கேஸ்வரன் படம் எடுக்கப்போவதாகவும், அதில் ராவணனாக நடிக்க வேண்டும் என்றும் என்னை கேட்டார். இதற்கு கலைஞர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றார்.நாம் ஏதோ இது எப்படி இருக்கு? அதிருது, உதறுது என்று பேசி நடிக்கிறோம். கலைஞர் வசனத்தை பேச முடியுமா? என்று தயங்கினேன். இதை நான் கலைஞரிடமே சொல்லியிருக்கிறேன். அவர் என்னிடம், மலைக்கள்ளன்படம் பார்த்தீர்களா? என்று கேட்டார். பார்த்தேன் என்றேன். அதே படத்தை சிவாஜி பேசி நடித்தால் எப்படி இருந்திருக்கும்? என்று கேட்டார்.ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நான் இங்கே ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழம் இருக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். செண்டிமெண்ட் ஆக ஒரு விஷயம் பூதாகரமாக பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப்பார்க்கிறார்கள். நமக்கு காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2 comments:

Anonymous said...

ramki,
adutha round aarambam aaiducha? ippo yaroda turn sir?

Anonymous said...

நம்மோட தலைவரு என்நாளும் SuperStarரு!!

i-Theni
http://i-theni.blogspot.com