8.8.08

O ஞாநிக்கு சில கேள்விகள்?

கருத்து சார்ந்த நிலைப்பாட்டை தாண்டிய தனிமனித காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கும் ஞாநி, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.

உங்கள் மேல் பரிதாபப் படுகிறேன், இன்றோடு நீங்கள் காலி, -இப்படிப்பட்ட வாசகங்களுடன் ரஜினிக்கு முடிவுரை எழுத முயன்ற முயற்சி எத்தனை காலமாக நடந்து வருகிறது. அதையும் மீறிதானே இருந்து வருகிறார் ரஜினி.உங்களுக்கு புரிபடாத இந்த ரசிக அபிமானத்தைதானே உங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

ரஜினி உதைப்பேன் என்று சொன்னவுடன் பூச்செண்டு கொடுத்தீர்கள். இன்று வருத்தம் தெரிவித்தவுடன் குட்டு வைக்கிறீர்கள். ரஜினியின் நிலைப்பாட்டை ஒரு சினிமா நடிகருக்கான பலவீனம் .சுயநலத்திற்காக அப்படிசெய்தார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்க நான் முயலவில்லை. ஆனால் மேன்மைமிகு பத்திரிக்கை தொழில் நடத்தும் தங்களது நிலைப்பாடு என்ன..ரஜினி உதைப்பேன் என்பதற்கு பூச்செண்டு கொடுத்தீரே? உதைப்பது வன்முறைச் செயல்- நீங்கள் வன்முறையை ஆதரிக்கும் தீவிரவாதியா? ஏற்பில்லா கருத்தை சொல்லும் மனிதர்களை உதைப்பதுதான் உங்கள் நியாயமா?.

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் காணாமல் போய்விட்டது என்பது உங்களது அடுத்த கண்டுபிடிப்பு. இவ்வகையான நப்பாசையுடன் உங்களை போல எத்தனை பேர் எத்தனை வருடங்களாக அலைகிறார்கள் தெரியுமா? விடிஞ்சா கல்யாணம் விமர்சனத்தில் ஆனந்த விகடன் “அடுத்த வருட சூப்பர் ஸ்டார் சத்தியராஜ்” என்று எழுதியது. இன்று 2008- சத்தியராஜின் நிலைமை என்ன? சத்தியராஜ் மேடைகளில் கைத்தட்டல் வாங்க “கேணக் கூ---” என்று பேசிக்கொண்டிருக்கிறார். நீங்களெல்லாம் இவ்வாறு எழுதுவது ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பின்னணியை அறியாததால்தான்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் பேசிய அரசியல் வசனங்கள்தான அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கி தந்தது என்று நம்பினால் உங்களை காட்டிலும் ஏமாளி வேறு யாருமில்லை. கடந்த இரு படங்களில் (சிவாஜி, சந்திரமுகி) அரசியல் வசனமே கிடையாது. அப்படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. அதற்கும் சில சப்பைகட்டுகள் உங்களிடம் இருக்கின்றன- ஜோதிகா நடிப்புக்காகவும், ஸ்ரேயாவின் இடுப்புக்காவும் படம் ஓடியது என்று.

இந்த வாதத்தை முன்வைக்கும் அறிவு ஜீவிகளிடம் கேட்கிறேன். எழுபதுகளில் வந்த எம்.ஜி.ஆர் படங்களில் (உலகம் சுற்றும் வாலிபன் முதல் மீனவ நண்பன் வரை) அதீத கவர்ச்சி காட்சிகள் உண்டு. அந்த படங்களெல்லாம் ராதா சலூஜா,லதாவிற்காக ஓடியதா? எம்.ஜி.ஆரின் பங்கு ஒன்றுமேயில்லையா?

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மனிதர்களின் வெற்றியை அலசும்போது, அதன் பிண்ணனியில் உள்ள உளவியல் காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல், எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி. இந்த ரஜினிக்கு ரசிகர்களானவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

இந்த ரஜினி ரசிகனுக்கு, ரஜினி என்ற மனிதனை பிடிக்கும். அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் பிடிக்கும். அவனுக்கு வேண்டியது தீபாவளி மற்றும் பொங்கலுக்கு ரஜினி படம்.முதல்நாள் டிக்கெட். அதன் பின்னால் அவன் பிழைப்பு அவனுக்கு. இத்தகைய ரஜினி ரசிகர்கள்தான் இன்று வரை ரஜினியின் வெற்றிக்கு காரணம். அரசியல் ஆசையில் பேனர் கட்ட வந்தவர்கள் எல்லாம், விஜயகாந்த் கட்சிக்கு போய் விட்டார்கள். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உண்மையான ரஜினி ரசிகனை பாதிக்கலாம். ஆனால் அதன் கோபதாபங்கள் ரஜினி என்ற திரைநட்சத்திரத்தை ரசிப்பதிலிருந்து தடுக்காது. இல்லாவிடில் 1997 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி கருத்து தெரிவித்த போதே அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் காணாமல் போயிருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினியின் திரை ஆளுமைக்கு கிடைத்தது. அரசியல் நிலைப்பாடுகள் அதனை பாதிக்காது. இதனால்தான் பாபாவிற்கு பின்னால் ரஜினியால் மற்றுமொரு வெற்றியை பெற முடிந்தது.


தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க சொல்கிறீர்கள்( 49 ஓ). ஆனால் ரஜினி மற்றும் பொதுப்பிரச்சனைகளில் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற பத்திரிக்கைகாரர்கள்தான். ரசிகர்களல்ல.

பிரகாஷ் ராஜ், அர்ஜுன் ஆகியோருக்கு பிரச்சனை வருவதில்லையாம். ரஜினியின் திரை ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்நடிகர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தே உங்களது காழ்புணர்ச்சி புரிகிறது. இவர்களை போன்ற ஒரு சாதாரண நடிகனாக ரஜினியை மாற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை.

ரஜினி படத்தின் ஆபாச காட்சிகளை பற்றிய உங்கள் விமர்சனம் சிரிப்பை வரவழைக்கிறது. நீங்கள் முன்பு எழுதிய விகடனிலும் சரி, தற்பொழுது எழுதும் குமுதத்திலும் சரி, இருக்கும் அரை/முக்கால் நிர்வாணப்படங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? இத்தகைய பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையா? நீங்கள் எழுதுவதை மட்டும் வைத்து பத்திரிக்கை விற்க முடியாது என்பதால்தானே இப்படங்களையும் பத்திரிக்கைள் வெளியிடுகின்றன.

நீங்கள் குசேலனை முழுவதும் போட்டுத் தாக்காமல் இருப்பதற்கு மறைமுகக் காரணங்கள் உண்டு. இப்படம் பிரமிட் சாய்மீராவால் விநியாகிக்கப் படுகிறது. தங்களுடைய ஒற்றைரீல் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனம் பிரமிட் என்ற காரணத்தால் மட்டுமே நீங்கள் படத்தை பாராட்டுவது போல் பாசாங்கு செய்துள்ளீர்கள்.

ரஜினி என்ற சக்தியின் வீழ்ச்சியை வேடிக்க பார்க்கும் ஆசை உங்களிடம் அதீதமாயிருக்கிறது. தங்களுக்கு தற்காலிக வெற்றியும், மகிழ்ச்சியும் கூட கிடைத்து விட்டதைப் போல் தோன்றலாம். ஆனால் அது மாயை.

ரஜினியின் வேலையை அறிவு ஜீவித்தனமான வாதங்களால் சிதைக்க வேண்டும் என்பதே உங்கள் முயற்சி. நீங்கள் வேண்டுமானால் மற்றவர் தொழில் நடத்துவதில் தவறு காணலாம்.. நாங்கள் அப்படியில்லை.

பாவம் நீங்கள்! உங்கள் தொழிலை நடத்துங்கள்!





நன்றி - www.rajinifans.com

2 comments:

வெட்டி வேலை said...

ரஜினி போன்றவர்கள் ஜெயிப்பதற்கு உங்களை போன்றவர்களின் சினிமா வெறி தான் காரணம். அவர்களுக்காக என்றால் அவர்கள் நடித்த எல்லா படங்களுமே ஓடியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை.

வெட்டி வேலை said...

என்னுடைய பின்னூட்டத்தை போட மாட்டீர்கள் என்று தெரியும். எனென்றால் மாற்று கருத்துகளுக்கு காதை மூடிக் கொள்ளும் அறிவாளிகள் தான் இங்கே அதிகம்.