14.1.04

நக்கீரன் கோபால் - இடம் சென்னை புத்தகக் கண்காட்சி 2004.

பேச்சில் அதே சுறுசுறுப்பு, எளிமை. வலிய வந்து வாழ்த்துச் சொன்னவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். இதமாய் கைகுலுக்கி கொஞ்சி பேசும்போது அந்த அரிவாள் மீசையை பார்த்து எந்தக் குழந்தையும் மிரண்டு போகாமலிருந்ததும் ஆச்சரியம். என் பெயரைச் சொன்னதும் டக்கென்று ஊரைச் சொல்லி ஷாக்கடிக்க வைத்தார். ஆட்டோகிராப் வாங்கிய கையோடு ஒரு மினி உரையாடல். அதிலிருந்து சில பகுதிகள்...

"ரஜினி ரசிகனை திரும்பவும் வெளியிடும் உத்தேசமுண்டா?"

"ரஜினி ரசிகன்ங்கிறது ரஜினியைப் பத்தி மட்டுமே. அடிக்கடி ரஜினியைப் பத்தி எழுதி சம்பாதிக்க நான் வியாபாரி இல்லை. அதுவுமில்லாம இப்பெல்லாம் அவர் ஒதுங்க நினைக்கிறார். அநாவசியாமா அவரை தொல்லை பண்ணக் கூடாதுங்கிறதனலாதான் ஒண்ணும் பண்றதில்லே"

"குறைந்த பட்சம் முன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது ரஜினி ரசிகர்களை கொண்டு வரலாமே?"

"இல்லே. அதான் சொன்னேனே... நேரம் வரும்போது கண்டிப்பா செய்யலாம். நிறைய பேர் இது பத்தி கேட்டுட்டுதான் இருக்காங்க. பார்ப்போம்"

"புதுப்பட அறிவிப்பு ரஜினி கிட்டேயிருந்து வந்தா ரஜினி ரசிகனை நாங்க எதிர்பார்க்கலாமா?"

"கண்டிப்பா. ரஜினிகிட்டேர்ந்து சிக்னல் வந்தா பட ரீலிசின்போது கண்டிப்பா ஸ்பெஷல் வரும்".

தமிழகத்தில் முதல் ஆளாக பொடாவின் பிடியிலிருந்து மீண்டு வந்ததற்காக என் சார்பிலும் நம்முடைய வெப்சைட் சார்பிலும் வாழ்த்திவிட்டு வந்தேன்.

- ஜெ. ரஜினி ராம்கி